வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி
கணித்தமிழ் ஆசான்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி மாணவர்கள்
.............................
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் கணினிப் பயன்பாட்டியல் துறையும் இணைந்து, சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக நிதி உதவி பெற்று, கணித்தமிழ்ப் பேரவையை நிறுவி, அதன் இரண்டாவது நிகழ்வாக வலைப்பூ உருவாக்க உள்ளீட்டுப் பயிற்சி எனும் பொருண்மையில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அப்பயிலரங்கத்தின் தொடக்க விழா 27.6.2020 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் செல்வன் மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தி, இது போன்ற பயிற்சிகள் தந்து தமிழில் வலைப்பூ நிரம்ப உருவாக்கித் தமிழ்த் தரவுத் தளத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கூறி மாணவப் பயிற்றுநர்களை ஆற்றுப்படுத்தினார்கள். அதுமட்டுமன்றி இந்நிகழ்வு இந்திய வரலாற்றில் ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கிறது. அதனை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி தொடங்கி வைத்துள்ளமை பெருமைக்குரியது என்றும் கூறினார்கள். மாணவர்களின் இம்முயற்சியைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்களும் கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர் க.கீதா அவர்களும் வாழ்த்தி வரவேற்றார்கள். மேலும் இந்நிகழ்வில் கணித்தமிழ்ப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆய்வு வளமையாருமாகிய திரு.அருண்குமார் அவர்கள் கணித்தமிழ்ப் பேரவையின் செயல்பாடுகளைக் கூறினார்கள். நிகழ்வின் இறுதியில் செல்வி ரேஷ்மா அவர்கள் நன்றி கூற தொடக்கவிழா இனிதே நிறைவுற்றது. அதன் பிறகு சில வினாடிகளில் நமது ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.சத்தியராஜ் அவர்களும் செல்வன் ஆர்லின் ராஜ் அவர்களும் எழுதும் உள்ளீட்டுக் கருவிகளான கூகுள் உள்ளீட்டுக் கருவி (google handwriting input app), கூகுள் உரைத் தட்டச்சு (google voice typing), ஜி-பலகை (g-board)போன்ற திறன்பேசிச் செயலிகள் (smart phone apps), மேசைக் கணினி (desktop), மடிக்கணினி(laptop) போன்றவைக்குத் தேவையான தமிழ் தட்டச்சுக் கருவிகளான இ-கலப்பை (e-klappai), என்.எச்.எம். எழுதி(NHM writer) போன்ற எழுதிகளைப் பதிவிறக்கம் செய்வது மற்றும் அடிப்படை அமைப்புகளை (basic settings)மாற்றம் செய்வது குறித்து விளக்கினார்கள். அதனைத் தொடர்ந்து 28.6.2020 அன்று வலைப்பூ உருவாக்கம் குறித்து, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா மாணவர்களான செல்வன் அ.ஆர்லின் ராஜ், செல்வன் மணிகண்டன், செல்விதாரணி, செல்வி பவித்ரா, செல்வி ரேஷ்மா ஆகியோர் பயிற்சி அளித்தனர்/அளித்தும் வருகின்றனர். இந்நிகழ்வில் கலந்துகொள்ள 182 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். 80 பேர்களுக்கு மேல் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுள் பேராசிரியர்கள் 70 விழுக்காட்டினரும் மாணவர்கள் 28 விழுக்காட்டினரும் ஆய்வாளர்கள் 1.5 விழுக்காட்டினரும் 0.5 விழுக்காட்டினர் கணித்தமிழ் ஆர்வலரும் ஆவர். செளதி அரேபியா, இலங்கை போன்ற நாடுகளில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்களும் பயிற்சிப் பெற்று வலைப்பூ எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வைக் கணித்தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் த.சத்தியராஜ் & திருமதி கு.இராமஜெயம் அவர்கள் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
Comments
Post a Comment